Tuesday, 24 September 2013

சுற்றம் எங்கும் வலிதானடா !!


ஒரு வலி மறக்க
ஒரு நொடி துணிந்தான்
ஒரு திசை துறக்க
ஒரு வழியில் யோசித்தான்
தூக்கி சென்ற தோள்களை
தூரம் வைத்து பார்த்தானே 
அன்னம் தந்த கைகளையும்
அந்நியம் என்று நினைத்தானோ
பூட்டி கொண்டு அழுதாலும்
பூரணமாய் வாழ்க்கை சொல்வான்
குமுறி குமுறி அழுகின்றோம்
குடையும் கையில் அசைவில்லையே
உன்னை நீயாய் மாய்த்தாயே
உறவின் அர்த்தம் அழித்தாயே
நினைத்து பார்க்க ஒரு நொடிக்கு
நினைவுகள் நங்கள் தரவில்லையா 
உன் வலி நீ மறக்க ,
உலகம்  விட்டு சென்றுவிட்டாய்!!
சுற்றி சுற்றி பார்த்தாலும்,
சுற்றம் எங்கும் இன்று வலிதானடா !!
புத்தம் புது சுயநலவாதியே!!
தற்கொலை என்று நீ நினைத்தாய்
அட கோழை நண்பா!!
எங்கள் உணர்வை அல்லவா
நீ கொலை செய்கின்றாய் ??
சாவின் விளிம்பு  நொடி மட்டும்  உனக்கு !!
ஒவ்வொரு நாழிகை வேளையிலும்,
ஒருநூறு ஜீவன் சுவைக்கின்றது,
சாவின் விளிம்பு வலியை - உன்னால்!!
முடிவு  என்று நீ நினைத்தாய் !!
முடியாமல் புது வேதனை தொடக்கி சென்றாயே !! 

Monday, 16 September 2013

சித்தம் வேண்டும் ஒரு பூமி!!!


சுழன்று சுழன்று கலைத்து போன
 என் உலகமே நீ உறைந்துவிடு !!
புதிதாய் ஒரு பூமி ஒன்றை
 படைக்க போகின்றோம் வழி விடு !!
செயற்கையாய் ஒரு கோள் எதற்கு
 இயற்கையில் வாழ வழி இருக்கு !!
பிரிவு செய்திடும் மொழி வேண்டாம்
 பரிவு பாஷைகள் இனி போதும் !!
எல்லை கோடுகள் இங்கு வேண்டாமே
 தேச நேசமும் இங்கு வேண்டாமே!!
அண்டத்தில் ஒரு சிறை செய்வேன்
 கடவுளை அங்கேயே நிறுத்தி வைப்பேன் !!
மனிதம் வீசிடும் என் பூமியிலே
 புனிதம் வேறொன்றும் தேவை இல்லை!!
பாச நேசங்கள் வளர்த்து வைப்பேன்
 ஓட்டு வேஷங்கள் துறக்க வைப்பேன் !!
அரசாங்கம் அங்கு தேவை இல்லை
 எங்கள் மூச்சிற்கு  வேறு பங்கம் இல்லை !!
ஆசை பாதைகள் போட்டு வைப்பேன்
 அன்பு வேதியியல் மட்டும்  நிகழச்செய்வேன்!!
புத்தம் புதிதாய் என் சித்தம் கேட்கும்
 பூமி ஒன்று வேண்டும் இன்று !!
யுத்தம் காணாத காற்று மண்டலம்
 என் சுவாசம் சேரனும் தினந்தோறும் !!
இரத்தம் உறையும்  இறுதி நிமிடத்திலும்
 புன்னகை சிந்தி உயிர் அடங்கிட வேண்டும் !!

Friday, 13 September 2013

என் கனவே !! என் சிலிர்ப்பே !!


என் உள்ளங்கையின் ரேகை எல்லாம்
 தவம் செய்து தினம் துடிக்கின்றது
என் ஆயுள்ரேகை நீளச் செய்யும்
 உன் நடுவிரலின் தீண்டல் சுமந்திட!!
என் தலையணை என்னை பழிக்கின்றது
 கனவில் உன் முகம் இல்லை என்றால்..!!
என் இரவுகள் நகன்றிட மறுக்கின்றது
 உன் நினைவுகள் சுமக்கும் நாழிகையால்!!
என் காலைநேர விடியல் எல்லாம்
 நம் பார்வைகளின் யுத்த முத்ததிற்கே!!
என் சுடிதார்களுக்குள் சண்டை மூளுது 
 உன் விழித்திரையில் நிழலாய் மாற !!
என் கன்னத்தசைகள்  காத்து  கிடக்குது 
 உன் வருகையால் நிகழும் வெட்க அசைவுக்கு !!
மெல்ல மெல்ல மாற்றம் பிறந்தது!!
 என் அழகின் மாற்றம் புதிரை உடைத்தது!!
உன் விரல்கள் மீது நீ  தாடை பதித்து
 ஓரம் பார்த்த பார்வையில் தொலைந்தேன்!!
புருவம் தூக்கி என் பருவம்  வென்றாய்!!
கர்வம் கலைத்து திருடி சென்றாய்!!
என்னுள் உன்னை மெல்ல விதைத்தாய்!!
உந்தன் சிலிர்ப்பை உணரச் செய்தாய்!!
என் கனவே !!
என் சிலிர்ப்பே !!
என் நாடியின் துடிப்பாய் ஆனாயே!!
உனக்குள்ளே என்னை விதைத்தேன் !!
உன்னை திருடியே நான் நானாகின்றேன்!! 

Sunday, 1 September 2013

நீ இல்லா என் நிமிடங்கள்!!!

என்னுள் புகுந்து என்னை இழுக்கும்
 பார்வையின்  தீண்டல் தொலைவிலே !!
கன்னம் சிவக்க காதல் பேசும்
 இதழ்களின் அசைவு கனவினிலே !!
என் நாசி கடக்கும் தென்றல்
 உன் பெயர் மட்டும் சுமக்கின்றதே!!
தினம் தினம் கடக்கும் சாலைகளும்
 என்னை தனியாய் தாங்க மறுக்கின்றது !!
ஒரு விழி மட்டும் மைதீட்டி
 மறு விழி மறந்து  நடக்கின்றேன் !!
என் துப்பட்டாவின் ஓரம் எல்லாம்
 உன் வியர்வை துளியை கேட்கின்றது !!
என் இரவுகள் எல்லாம் நீயின்றி
 உன் கதைகள் சுமக்க ஏங்குதடா !!
நான் கேட்கும் இசை எல்லாம்
 உன் குரலாய் மாறி கொல்லுதடா !!
உன் ஓரப்பார்வையின் மொழி படிக்க
 ஒவ்வாரு நொடியிலும் ஏங்குகின்றேன்!!
கண்ணீர் வார்த்தையை கற்று தந்திட
 இத்தனை தூரம் சென்றாயோ!!
என் பிறவியின் முடிவே !!!
நீ இல்லா என் நிமிடங்களை
 களவாடி செல்ல வந்துவிடு !!
என் விழியின் ஓரம் வழியும் நீரை
 உன் இதழில் சீக்கிரம் சுமந்துவிடு !!

Monday, 26 August 2013

கற்கண்டு கண்ணீர் காலங்கள் !!!

கனவுகள் தந்திடும் சுகங்களிலே
மெல்ல பிறந்திடும் விழி நீரே!!
என் திசைகளில் எங்கும் நீ இருந்தால்
ஆனந்தம் ஆகிடும் என் ஆயுளே !!

கதைகளை செவிகளில் சேர்த்தப்பின்னே,
தேவதை உறங்கும் அழகினிலே,
தாயின் தாளக்  கொட்டாவி
சிந்தும் கண்ணீர் ராகங்களை!!

பட்டுப் புடவை மடிப்புகளை,
மெல்ல மெல்ல சரிசெய்து,
தந்தை முகம் பார்க்கையில்,
விழி வழி பதிலாய் துளி வந்து சேரும்!!!

தயங்கி தயங்கி விழி பார்த்து,
தயக்கம் மறந்து இதழ் சேர்க்கும்,
முதல் முத்தத்தின் முடிவில் ,
முகம்சேரும் அழகிய கண்ணீர் துளி !!

வலிகள் தீர்க்கும் விரல்களின் நடுவில்,
தாடை பதித்து இதழ்கள் விரித்து ,
புருவம் சுருக்கி சுவாசம் நீளும்,
நொடிகளின் முடிவிலும் சிறு துளி வரும்!!

சுகங்களின் சுமைகள் நீளும் வேளையில்,
நெஞ்சின் முடிப்புகள் துடிக்கும் ஓசையில்,
சின்ன சின்னதாய் கண்களில் சிலிர்க்கும்,
மனிதம் விரும்பும் ஆனந்த கண்ணீர் !!

Thursday, 22 August 2013

என்னவனே...!!!


என் கன்னக்குழி நடுவினில்
 காதல் நிறைத்தாய்!!
என் வளையலின் நுனியினில்
 முத்தம் பதித்தாய்!!
என் விரல்களின் எண்ணிக்கை
 உன் விரல்களே அறியும்!!
என் காதலின் வண்ணங்கள்
 உன் கருவிழி அறியும்!!
உன் சட்டைக்கையின்  நுனியினில்
என் கட்டைவிரல் காதல்செய்யும்!!
உன் தோள்களின் கேள்விக்கு
 என் கூந்தல்நுனி கதை தரும் !!
நம் விழிகள் பேசும் வேளையினில்
 என் இதயம் உறைவதை உணர்கின்றேன்!!
நீ நகரும் ஒவ்வொரு நொடியினிலும்
 உன்னுடன் வரவே துடிக்கின்றேன்!!
தினம் தினம் உந்தன் பார்வையினாலே
 ஏக்கங்கள் கோடி  தருகின்றாய்!!
நொடிகள்  ஒன்றையும் தவற விடாமல்
 வியப்புகள் ஆயிரம் சேர்க்கின்றாய் !!
எனக்கே எனக்கானவனே....
உன்னில் என்னை சேர்த்துவிடு !!
 என் இதய துடிப்பையும் திருடிவிடு !! 

Tuesday, 20 August 2013

அன்பு உயிர் பெறும் போது!!!


உயிர் உருக்கி பாசம் தருவான்
இரத்த நாளங்களில் தேன் சுமப்பான்
தலை சாய்க்க இடம் தருவான்
திசை காட்ட விரல் பிடிப்பான்

நான் பேசும் மொழிகள்  எல்லாம்
அவன் சொன்ன வார்த்தைகளை சுமக்கும்
இலக்கணங்கள் யாவும் சொல்லி தந்தான்
கண்ணீரின் அர்த்தத்தை மறைத்து வைத்தான்

வானம் என்று நான் சொன்னால்
வானவில்லால் பாதை அமைப்பான்
தாகம் என்று இமைகள் அசைந்தால்
அவன் ஜீவனும் முந்திவரும்

கையில் வந்த தேவதை  என்று
பொய்கள் பூசி பாசம் நெய்திடுவான்
நான் கொடுக்கும் சுடு நீரும்
சபாஷ் ரசம் ஆகும் அவனிடத்தில்

கம்பன் மீண்டும் பிறந்தாலும்
மொழிகள் புதிதாய் படைத்தாலும்
இந்த உறவின் அழகு புரியாது
இந்த அன்பின் இணைப்பும் தெரியாது
அண்ணன்களும் -தங்கைகளும் !!!